வேலைக்காரப் பெண்ணை கர்ப்பமாக்கிய மாஜி நீதிபதி மகன்- கொல்ல முயற்சி- குடும்பத்தோடு கைது!
கட்டாக்: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் வேலைக்காரப் பெண்ணுடன் உறவு கொண்டு கர்ப்பமாக்கினார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியின் மகன். பின்னர் தனது குடும்பத்தோடு சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தற்போது கைதாகியுள்ளார்.
சமீர்குமார்ராய் என்பவர் முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதியாவார். அவருக்கு கீதிகா என்ற மனைவியும், சத்யபிரதாராய் என்ற மகனும் உண்டு. திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டு வேலைக்கார பெண்ணுடன் சத்யபிரதா ராய் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணுடன் சத்யபிரதாராய்க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதை தட்டிக் கேட்டதற்காகவே கர்ப்பிணி என்றும் பாராமல் கூலி ஆள் வைத்து அவளை கொலை செய்ய முயன்றதாக செய்தியாளர்களிடம் பேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆளை வைத்து கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக முன்னாள் நீதிபதியும், அவரது மனைவி, மகன் மற்றும் எலக்ட்ரீசியன் பாபினா என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நீதிபதியின் மகன் சத்யபிராத் பிஎல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஒருமுறை அந்த பெண்ணை கொலை செய்ய முயன்றுள்ளார். அது தோல்வியடையவே கூலி ஆள் வைத்து இரண்டாவது முறையாக கொலை செய்ய முயன்றனர். கூலியாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்ணை கடத்திச் சென்ற கூலி ஆட்கள் அவளின் கை, கால்களை கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். உள்ளூர் ஆட்கள் கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications