வெயிலின் தாண்டவத்தை சற்றே தணித்த கோடை மழை...!
சென்னை: அடடடடா, எப்பப்பா குறையும் இந்த வெயில்... இதுதான் தமிழகத்தின் எந்தப் பக்கம் போனாலும் மக்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். அந்த அளவுக்கு வெயில் வெளுத்து கட்டிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே கோடை மழை பொழிந்தபடி இருப்பதால் பெரும் அவியலிலிருந்து மக்கள் தற்காலிகமாக தப்பியுள்ளனர்.
கோடை மழை காரணமாக பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் குறைவாகவே இருப்பதால் மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மண்டையைப் பிளப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த முறையும் அப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்க நல்ல கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் தினசரி மழையாக இருக்கிறது. இதேபோலத்தான் பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
அதேபோல காற்றும் வீசி வருவதால் வெயில் பெரிய அளவில் மக்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் சென்னையில் மட்டும் இதுவரை பெரிய அளவில் மழையைக் காணவில்லை, வெயிலும் தணிவதும், எழுவதுமாகவே உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து வேலூரில்தான் வெயில் அதிகமாக உள்ளது. நேற்று அங்கு 104 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டவில்லை.
இதற்கிடையே, உட்புறத் தமிழகம் வடக்கு கடலோ பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுச்சேரி பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும். வெப்ப சலனம் காரணமாக காற்று மற்றும் மேக மூட்டம் பரவலாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகருக்குள் 98 டிகிரியாக நேற்று வெயில் அடித்தது. புறநகர்ப் பகுதிகளில் 100 டிகிரியைத் தொட்டிருந்தது.
நெல்லை 103, திருச்சி 102, மதுரை 99, கடலூர் 99, நாகை 99, கோவை 95, சேலம் 98, தூத்துக்குடி 94 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.












Click it and Unblock the Notifications