திமுக மீதான பரிதி இளம்வழுதியின் கோபம் தணிந்தது- மீண்டும் கட்சிக்கு திரும்ப முடிவு
சென்னை: திமுக தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த பரிதி இளம்வழுதி மீண்டும் அக்கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏற்பட்ட உள்கட்சி பிரச்சனையில் தம்மை அவமதிக்கும் வகையில் தி.மு.க. தலைமை செயல்பட்டதாகக் கூறி அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
கடந்த பல மாதங்களாக அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்த பரிதி இளம்வழுதி அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியை திருமண விழா ஒன்றில் சந்தித்துப் பேசினார். பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று கருணாநிதியிடம் பேசினார். மேலும் தமது மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார்.
பரிதி இளம்வழுதி அதிக காட்டத்தை வெளிப்படுத்திய மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து தமது நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் மீண்டும் கட்சிப் பணியாற்ற விரும்புவதாகவும் இருவரிடமும் பரிதி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் நடைபெறும் பரிதி வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது. இத்திருமண விழாவுக்குப் பிறகு பரிதி தீவிர அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.