நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கும் கேசுபாய் பட்டேல்
அகமதாபாத்: கர்நாடக பாரதிய ஜனதாவின் பிரச்சனை என்னவாகுமோ எனத் தெரியாத நிலையில் குஜராத் பாரதிய ஜனதாவிலும் குடைச்சல் ஆரம்பித்துவிட்டது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பவர் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் பட்டேல். குஜராத்தில் 18 விழுக்காடு உள்ள பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர். 1995, 1998 ஆண்டுகளில் குஜராத் மாநில முதல்வராக இருந்தவர். 2001-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த 2 முக்கிய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்விய அடைந்த பிறகு கேசுபாய் பட்டேலுக்கு இறங்குமுகமானது. அப்போதுதான் நரேந்திர மோடியும் உருவானார்.
கடந்த 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலலில் மோடிக்கு எதிராக பகிரங்கமாகவே வாக்களிக்கச் சொன்னவர் கேசுபாய் பட்டேல். தாம்கூட வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டவர்.
தற்போது மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார். இதற்குக் காரணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல். தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் கேசுபாய் பட்டேல் போகுமிடமெல்லாம் நரேந்திர மோடியை ஒரு பிடி பிடிக்காமல் விடுவதில்லை. குஜராத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் சாடி வருகிறார். இதேபோல் குஜராத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் பகிரங்கமாக கூறி வருகின்றார்.
கேசுபாய் பட்டேலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர் ஜதாபியா. இவர் பாஜகவில் இருந்து விலகி மகாகுஜராத் ஜனதா கட்சியை தொடங்கியவர். இவரும் கேசுபாய் பட்டேலுடன் சேர்ந்து கொண்டு நரேந்திர மோடிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
பழைய எதிரிகள் கரம் கோர்த்து எழுந்து நிற்பது நரேந்திர மோடிக்கு நல்லதா? கெட்டதா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்....












Click it and Unblock the Notifications