சுரங்க ஊழல் வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்ட்

கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பெங்களூர், ஷிமோகா ஆகிய இடங்களில் உள்ள எதியூரப்பாவின் வீடுகள், அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள், மருமகன் ஆர். சோஹன் குமாரின் வீடு, மகனின் கம்பெனி, சுரங்க உரிமம் பெற எதியூரப்பா குடும்பத்திற்கு ரூ.20 கோடி கொடுத்த பெல்லாரியில் உள்ள சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என மொத்தம் 8 இடங்களில் இன்று காலை 6.15 மணி மாலை 4 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கிடையே ஷிமோகாவில் உள்ள எதியூரப்பாவின் இளைய மருமகன் உதய் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
எதியூரப்பா மீதான சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. சுரங்க ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் தான் பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலால் எதியூரப்பா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் தனது ஆதரவாளரான சதானந்தா கவுடாவை முதல்வராக்கினார்.
தற்போது மீண்டும் முதல்வர் பதவி கேட்டு கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த சிபிஐ ரெய்டு முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications