நாடாளுமன்ற விழாக்களில் எங்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை: கொந்தளிக்கும் ராஜ்யசபா எம்.பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று காலை பேசிய அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன், நாடாளுமன்ற 60-ம் ஆண்டு விழாவில் மக்களவை உறுப்பினர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்ற 60-ம் ஆண்டு விழாவையொட்டிய புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் முன்வரிசையில் முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்காக 60 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மக்களவையில் 4 அல்லது அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கும் மாநிலங்களவையில் 8அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கும் அந்த இருக்கைகள் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. இந்தக் விகிதம் எங்களுக்கு புரியவில்லை. 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கு 4, 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு 8 என்பது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்த மாநிலங்களவை சபாநாயகர் ஹமீத் அன்சாரி, இந்த விவகரத்தை நாடாளுமன்ற செயலருக்குக் கொண்டு செல்வதாகவும் இரண்டு அவை உறுப்பினர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.