ஜார்க்கண்டில் ரயிலை சிறைபிடித்து, என்ஜினில் கேன் வெடிகுண்டு மாட்டிய மாவோயிஸ்டுகள்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் பயணிகள் ரயிலை சிறைபிடித்து அதன் என்ஜினில் 1 கிலோ எடையுள்ள கேன் வெடிகுண்டை மாட்டிவி்ட்டு தப்பியோடிவிட்டனர்.
மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு டாடா-பிலாஸ்பூர் பயணிகள் ரயில் ஜார்க்கண்ட் மாநிலம் பொசைட்டா ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கையில் அதை ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் நிறுத்தி சிறை பிடித்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் ரயிலில் இருந்த அவர்கள் 12 பெட்டிகளிலும் தங்களின் பந்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டினர். மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு அரசை வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டினர். பின்னர் ரயில் என்ஜினில் 1கிலோ எடையுள்ள கேன் வெடிகுண்டை தொங்கவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அதன் பிறகு ரயில் வெடிகுண்டுடன் மனோகர்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிடும் முன்பு வெடிகுண்டுள்ள என்ஜின் ரயிலில் இருந்து தனியே அகற்றப்பட்டது. அதன் பிறகு பயணிகள் கீழே இறக்கப்ப்டடு வேறு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி அதை செயல் இழக்கச் செய்தனர்.
இந்த செயலை ஹபில் சார்வா மற்றும் சந்திப் தலைமையிலான மாவோயிஸ்டுகள் தான் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து போலீசாரும், மத்திய ரிசர்வ் படையினரும் சேர்ந்து மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடினர். நேற்று அதிகாலை சாலை கிரமாத்தில் ஒரு மாவோயிஸ்ட் கும்பல் சிக்கியது. அங்கு போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சுமார் 45 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் எந்த உயிரிழப்பும் இல்லை.