டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 குழந்தைகள் பலி: பலி எண்ணிக்கை 19க உயர்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் பலியாகினர். இதையடுத்து டெங்கு காய்ச்சலால் பலியானார் எண்ணிக்கை 19க உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது இரண்டு வயது குழந்தை விஷ்ணு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது. நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதே போன்று வீரவநல்லூர் வெள்ளக்குழி செளராஷ்டிரா காலனியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஜெகன் என்ற சிறுவனும டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் நேற்று காலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான்.
நேற்று அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்ததை அடுத்து டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19க உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் சிலருக்கு காய்ச்சலின் தன்மை தீவிரமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் மாநகரைச் சேர்ந்த சிலர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை நெல்லை மாவட்டத்தில் பரவிய டெங்கு காய்ச்சல் தற்போது தூத்துக்குடி மாவட்ட மக்களையும் தாக்கி வருகிறது. இதையடுத்து அந்த மாவட்ட சுகாதார துறையினரும் உஷார்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி நெல்லை அரசு மருத்துவமனையில் மட்டும் 141 பேர் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.