ஜனாதிபதி தேர்தல்: ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்ட பி.ஏ.சங்மா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சங்மா, ஜெயலலிதாவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் இணைந்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஜெயலலிதா. இதற்காக ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவைப் பெறவும் முயன்று வருகிறார். கடந்த வாரம் சென்னை வந்த அவரை நேரில் சந்தித்தும் ஜெயலலிதா பேசினார்.
இந் நிலையில் தேசியவாத கட்சியின் முக்கியத் தலைவரான சங்மாவும் ஜனாதிபதியாக ஆசைப்படுகிறார். அவரது கட்சியின் தலைவரான சரத் பவாரும், அடுத்த ஜனாதிபதியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும் என்று பேசியிருப்பது சங்மாவை மனதில் வைத்துத் தான்.
இந் நிலையில் சென்னை வந்த சங்மா, ஜெயலலிதாவை சந்தித்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அவருடன் அவரது மகளும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சருமான அகதா சங்மாவும் உடன் வந்தார்.
இருவரும் தலைமை செயலகத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சங்மா கூறிவிட்டுச் சென்றார்.
நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை ஜனாதிபதி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்மா மேகாலயா மாநிலத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications