நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் உக்கிரம்: நேற்று 112 டிகிரி பதிவானது
சென்னை: சென்னையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 112 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.
கோடைகாலத்தின் உச்சமான கத்திரி வெயில் ஒவ்வொரு நாளும் அனலைத் தகித்தபடியே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் கோடை மழை பெய்து சற்றே ஆறுதல்படுத்தி வருகிறது.
ஆனால் சென்னையில் 109.4 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. நேற்றே வெயில் உக்கிரத்தை கொட்டியது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. சென்னை அண்ணாசாலை தாராப்பூர் கட்டிடத்தில் வைக்கப்பட்டு உள்ள வெயில் அளவை காட்டும் கருவியில் 112.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 110.1 டிகிரியும் பதிவானது.
கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் பதிவானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய வெயில் அதை நெருங்கிவிட்டது.
அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது. அதுவரை வெயில் கொடுமை அதிகமாக இருக்கும்.
வெயில் அதிகரித்து வருவது பற்றி சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்; அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழ்நாட்டில் அனல் காற்று வீசும் என்றனர்.