வறுத்தெடுத்த கத்திரி நாளை விடைபெறுகிறது- ஆந்திராவில் வெயிலுக்கு பலி 20!
சென்னை: நாடு முழுவதும் கடந்த ஒரு மாதகாலமாக அக்னி வெயில் தனது முழு உக்கிரத்தைக் கொட்டி வாட்டி வதைத்துவிட்டது. ஆந்திர மாநிலத்தில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் 100 டிகிரி என்றிருந்த நிலை மீறிப் போய் 110,112 டிகிரி என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
சென்னையில் கடந்த 10 நாட்களாக வெயில் உச்சகட்ட அக்னியை கக்கி வருகிறது. நாள்தோறும் குறைந்தது 105 டிகிரி என்ற நிலை. சில நாட்களில் அதிகபட்சமாக 112 டிகிரி.
இந்நிலையில் ஆந்திராவில் மொத்தம் 20 பேர் வெயிலுக்குப் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கம்மம் மாவட்டம், கொத்த கூடம் நகரில் அதிகபட்சமாக 51 டிகிரி பதிவானது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழையால் கத்திரிவெயில் தாக்கல் தணிந்திருந்தாலும் அக்னியின் உக்கிரதாண்டவம் நீடித்தே வந்தது. இந்த கத்திரி வெயில் நாளையுடன் விடை பெற உள்ளது சற்றே ஆறுதலைத் தரலாம்.
தமிழகத்தில் சென்னையில் நேற்று 105 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதேபோல் மதுரை, வேலூர், கடலூர், திருநெல்வேலி, புதுச்சேரியிலும் 100 டிகிரியைத் தாண்டியது வெயில்.