நெல்லையில் டெங்கு காய்ச்சல் ஓழிப்பு பணிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஓழிப்பு பணிகளுக்கு அரசு தரும் ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்கள் வரத் தயங்குவதால், அப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் உதவியுடன் டெங்கு ஓழிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவியது. மாவட்டம் முழுவதும் கடந்த 40 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 45க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்துள்ளது.
தினமும் 300க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படையெடுக்க தொடங்கிய பிறகு தான் அரசு விழித்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது வீடுகளுக்குள் கொசு மருந்து அடிப்பது, ஏடிஎஸ் கொசு முட்டையிடும் வீடுகளுக்குள் உள்ள நல்ல தண்ணீர் சேமிப்பு தொட்டி மற்றும் பாத்திரங்களில் டெமிபாஸ் மருந்து தெளிப்பது ஆகிய 2 விதமாக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்காக மாவட்டத்தில் உள்ள 425 கிராம பஞ்சாயத்திகளிலும் சுமார் 2,125 பேர் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தினமும் ரூ.110 முதல் ரூ.150 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணி இடைவிடாமல் 2 மாதங்களுக்கு நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இப்பணிகளில் ஈடுபட தற்காலிக பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை இருப்பதால் பல கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு இப்பயிற்சி அளித்து இப்பணிக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் வரும் 4ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் அதன்பிறகு இப்பணியை தொய்வின்றி செய்வதில் பெரும் சிக்கல் உள்ளது என்று களப்பணி மேற்பார்வை செய்யும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.