நித்தியானந்தா காரில் செருப்பு வீச்சு... தட்டிக் கேட்ட சீடருக்கு மக்கள் தர்ம அடி!

கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வர சாமி கோவில் எனப்படும் சுக்கிரன் கோவில் மதுரை ஆதீன மடத்திற்குட்பட்டது. இங்கு வந்து கணக்கு கேட்ட நித்தியானந்தாவின் இரு சீடர்கள் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவு்ம் வ்நதுள்ளனர். நலம் விசாரித்த பின்னர் நேற்று இரவு சுமார் 200 பேர் சகிதம் கெஸ்ட் ஹவுஸில் தங்கினர்.
இன்று காலை கோவிலை மெளனமாக சுற்றி வரத் தீர்மானித்தனர். ஆனால் நிலைமை சரியில்லை என்பதால், போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் போலீஸ் வாகனங்கள் புடை சூழ இருவரும் கோவிலைச் சுற்றி வர அனுமதிக்கப்பட்டு அதன்படி செய்தனர்.
பின்னர் இருவரும் மதுரைக்குக் கிளம்பினர். அவர்களது கார் கோவில் வாசல் வழியாக வந்தபோது அங்கு திரண்டிருந்த கஞ்சனூர் கோவில் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நித்தியானந்தாவை எதிர்த்துக் கோஷமிட்டனர். பின்னர் ஒருவர் செருப்பை எடுத்து கார் மீது வீசினார்.
இதைப் பார்த்து கொதிப்படைந்த நித்தியானந்தாவின் சீடர்கள் இருவர் ஆவேசத்துடன் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தனர். அதைப் பார்த்த மீட்புக் குழுவினர் இருவரையும் சுற்றி வளைத்து நையப்புடைத்து விட்டனர். இருவரும் பொதுமக்களிடம் சிக்கி சரமாரியாக அடி வாங்கினர்.
பதறிப்போன போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சிலரைப் பிடித்து வேனில் ஏற்றினர்.
நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்களுக்கு தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு எதிர்ப்பு எங்குமே கிடைத்ததில்லை. ஆனால் கஞ்சனூர் மக்கள் கடுமையான தாக்குதல் உள்ளிட்டவற்றை கையில் எடுத்திருப்பதால் நித்தியானந்தா தரப்பு சற்றே அதிர்ச்சியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications