திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலி: பெற்றோர் கதறல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது. இதனால் தென்மாவட்டஙகளில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 51க அதிகரித்துள்ளது.
கடையநல்லூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியது. தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 50 பேர் வரை பலியாகினர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்புளியங்குடி அருந்ததியினர் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவீ்ந்திரன் என்பவரது 1 வயது மகன் ஹரிபிரசாத் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனது உடல் நிலை மோசமாகவே உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று முன்தினம் மாலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தான். இதனால் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 51க உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் 130 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 100 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்.
புளியங்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவீந்திரன்-முத்துமாரி தம்பதிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணமானது. சுமார் ஐந்தரை வருடம் கழித்து குழந்தை ஹரிபிரசாத் பிறந்தான். பிறந்து 1 வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுததைப் பார்க்க நெஞ்சை உருக்குவதாக இருந்தது.