வசூல்ராஜா ஸ்டைலில் காப்பியடித்த 9 எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு
சென்னை: வசூல்ராஜா ஸ்டைலில் தேர்வில் காப்பியடித்த சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 9 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தேர்வில் செல்போனை தொடைக்கு கீழ் வைத்து காதில் கேட்கும் கருவியை மாட்டி காப்பியடித்தனர் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில்
சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 1 மாணவி உள்பட 9 பேர் நூதன முறையில் காப்பியடித்து கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வு அறையில் இருந்த அவர்களுக்கு அதே கல்லூரியில் 2வது ஆண்டு படிக்கும் அறிவுவேல் மற்றும் சபரி செல்வம் என்னும் 2 மாணவர்கள் தான் விடை சொன்னார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகினர். இதையடுத்து அவர்கள் தான் வெளியில் இருந்து விடை சொன்னவர்கள் என்று போலீசார் உறுதி செய்தனர்.
அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினால் விடை சொல்ல அவர்கள் எவ்வளவு பணம் வாங்கினார்கள், இதில் எந்தெந்த பேராசிரியர்களுக்கு பங்கு உள்ளது என்பது தெரிய வரும். இந்நிலையில் போலீசார் இந்த விவகாரம் குறித்த இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள அந்த 2 மாணவர்களைப் பிடித்து விசாரித்த பிறகே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே காப்பியடித்த அந்த 9 பேரின் தேர்வு முடிவுகளை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்கள் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடை சொன்ன இருவரையும் பல்கலைக்கழகம் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதில் அறிவுவேல் விசாரணைக்கு ஆஜரானதாகவும், சபரி செல்வம் டெல்லி சென்றுள்ளதாகவும் விரைவில் விசாரணைக்கு நேரில் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.