ஜாதி, வருமான சான்றிதழ் பெற அரசு அலுவலகங்களில் காத்து கிடக்கும் பெற்றோர்
நெல்லை: தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாலுக்கா அலுவலகங்களில் ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் பல நாட்களாக காத்து கிடக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தாலுக்கா அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் பல பெற்றோருக்கு கடந்த ஒரு மாத காலமாக சான்றிதழ் கிடைக்காமல் தாலுக்கா அலுவலகங்களிலே காத்து கிடக்கின்றனர்.
பள்ளிகள் திறக்கும் முன்பாக ஜாதி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்பதால் பல பெற்றோரும் எப்படியாவது சான்றிதழை பெற்றுவிட வேண்டும் என்று ஒரே முடிவுடன் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் என்று அரசு அதிகாரிகளையும் தினமும் சென்று பார்த்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை குடியிருப்பு மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்தவர்கள் தற்போதைய புதிய நடைமுறை காரணமாக சான்றிதழ் பெற சிரமப்படுகின்றனர்.
+2 தேர்வு மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை வெப்சைட் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.
ஜாதி சான்றுகளை சமர்பிக்காத மாணவர்கள் ஓசி பிரிவில் இடம் பெறுவர் என்று கல்வித்துறை அறிவித்துவிட்டது. எனவே மாணவ, மாணவிகளின் பெற்றோர் எப்படியாவது ஜாதி சான்றிதழ் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications