கூடங்குளத்தில் மாதிரி எரிபொருள் அகற்றப்பட்டது- யுரேனியம் நிரப்ப அனுமதிக்கு காத்திருப்பு
கூடங்குளம்; கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மாதிரி எரிபொருளை அகற்றும் பணி முடிவடைந்தது. முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இந்திய அணுசக்தி கழகத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கூடங்குளத்தில் ரஷ்யா-இந்தியா கூட்டு முயற்சியுடன் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் இந்த மாதம் மின் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அணு உலையில் நிரப்பப்பட்ட மாதிரி எரிபொருளை அகற்றும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த பணி நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து முதல் அணு உலையை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாளில் நிறைவடையும் என தெரிகிறது.
இதை தொடர்ந்து யுரேனியம் எரிகோல்கள் நிரப்ப வேண்டும். முதல் அணு உலையை பொருத்தவரை 169 எரிகோல்கள் பொருத்த வேண்டும். இதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்திடம் கூடங்குளம் அணு மின் நிலையம் ஏற்கனவே விண்ணப்பம் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தால் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்கும். யுரேனியம் நிரப்பும் பணி முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்திடம் சமர்பிக்கப்படும் அதன்பின்னரும் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னரே மின் உற்பத்தி தொடங்கும்.
இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் கூறுகையில், மாதிரி எரிபொருளை அகற்றும் பணி முழுவதுமாக முடிந்து விட்டது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.