ப.சிதம்பரம் உடனே டிஸ்மிஸ் செய்ய ஜெயலலிதா, நிதின் கத்காரி வலியுறுத்தல்
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முறைகேடு மூலம் ப.சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வென்றார் என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணையில் இருந்து ஜராகாமல் அதாவது கூண்டில் ஏறி நின்று விசாரணை நடத்துவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.
ஏற்கெனவே ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரம் சர்ச்சையில் சிக்கி மக்களவையில் நெஞ்சில் குத்துங்க..நேர்மையை சந்தேகிக்காதீஙக என்று உருகியிருந்தார். தற்போது தேர்தல் முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில் ப.சிதம்பரம் போன்றவர்கள் அமைச்சர் பதவியில் இருப்பதே ஜனநாயகத்துக்கு இழுக்கானது- அவமானகரமானது என்றும் அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையெனில் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை சீர்குலைத்த ஒருவரை உள்துறை அமைச்சராக வைத்திருக்கக் கூடாது.. அதனால் ப.சிதம்பரம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் ப.சிதம்பரத்துக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
இதனிடையே பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரை தனித்தனியே ப.சிதம்பரம் நேரில் சந்தித்து தமது தரப்ப விளக்கத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.