இந்தி எதிர்ப்புப் போரை விமர்சிக்கும் கேலிச் சித்திரத்தை உடனே நீக்க கருணாநிதி வலியுறுத்தல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கழகத்தின் சார்பில் அச்சிட்டுள்ள 12-ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு கேலிச்சித்திரம், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல்' என்ற தலைப்பிலே வெளியிடப்பட்டுள்ளது. அந்த கேலிச்சித்திரம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மொழிப்பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் ஈடுபட்டதாக பொருள் கொள்ளும்படியாக தீட்டப்பட்டுள்ளது.
அந்த நாள்....
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பது தி.மு.க.வின் தாரக மந்திரங்களில் ஒன்றாகும். என்னை பொறுத்தவரையில் 1938-ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்து திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வருவேன். கையிலே தமிழ்கொடியை ஏந்தி, மூதறிஞர் ராஜாஜி கட்டாய இந்தி என்னும் கட்டாரியால் தமிழ் தாயை குத்த முற்படுவது போன்ற படம் அமைந்த பதாகை ஒன்றை சுமந்து கொண்டு, வாருங்கள் எல்லோரும் போருக்கு சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்தி பேயை விரட்டி திருப்பிடுவோம்!-ஓடி வந்த இந்தி பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே என்ற பாடலை முழங்கியவாறு அந்த ஊர்வலம் செல்லும்.
அந்த அளவிற்கு 1938-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டமும், அதன்பின் 1965-ம் ஆண்டு தமிழகமே இந்திக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வரலாறும் கழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். அத்தகைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிண்டல் செய்கின்ற அளவிற்கு மத்திய அரசின் பாட புத்தகத்தில் கேலி சித்திரம் இடம் பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் மனம் கொதிப்படைய செய்யும் காரியமாகும்.
எனவே மத்திய அரசு உடனடியாக இதிலே தலையீட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, இந்த கேலி சித்திரத்தை உடனடியாக பாடப்புத்தகங்களில் இருந்து அகற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டுமென கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.