அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த மாதிரி திருப்தியாக இல்லை: கள் நல்லசாமி
கரூர்: அதிமுக ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவில் திருப்திகரமாக இல்லை என்றும், கள் இறக்க அனுமதி கோரி விரைவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் 560 சர்க்கரை ஆலைகள் உள்ளது. இதில் பல ஆலைகளை எத்தனால் தயாரிக்கும் ஆலைகளாக மாற்ற வேண்டும். எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த முடியும். அவ்வாறு எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தினால் பெட்ரோல் விலை குறையும். சுற்றுப்புறச் சூழல் மாசு படாது. எரிபொருள் பயன்பாட்டில் நாடு தன்னிறவு அடைந்தால் தான் இந்தியா வல்லரசாக முடியும்.ஆண்டு தோறும் இந்தியாவில் வீணாக கடலில் கடக்கும் தண்ணீரை சேமிக்க நதிகளை இணைத்து, கரும்பு சாகுபடியை பெருக்கினால் பொது மக்களுக்கு சர்க்கரையை கூட இலவசமாக வழங்க முடியும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் கள்ளுக்கு உள்ள தடை நீக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த 2009ம் ஆண்டு நடந்த எம்.பி. தேர்தலின்போது பரமக்குடியிலும், கடந்த 2011ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் தெரிவித்தார். ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின்பு, கடந்த ஓராண்டில் 20 முறை அவரை சந்திக்க கடிதம் கொடுத்து நேரம் கேட்டோம். ஆனால் இது வரை எங்களுக்கு சந்திக்க நேரம் வழங்கவில்லை.
இதனால் கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கள் விற்பனை உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்துவது பற்றி பிரசீலனை செய்து வருகின்றோம். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்க வேட்பாளர் செங்கோலுக்கு கள் இயக்கம் ஆதரவு அளிக்கும். அதிமுக ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு திருப்தியாக இல்லை என்றார்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனின் நண்பர் என்பதால் அவருக்கு முதல்வரை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை என்று பேச்சு அடிபடுகிறது.