கேரளாவை உலுக்கும் டெங்கு, சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை
திருவனந்தபுரம்: தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல் தற்போது கேரளாவிலும் பரவி வருகிறது. அங்கு இதுவரை 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முதன் முதலில் கடையநல்லூர் பகுதியில் வேகமாக பரவியது. இந்நோய் தாக்கி இப்பகுதியி்ல் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இக்காய்ச்சல் வேகமாக பரவினாலும் அரசு தீவிரமாக டெங்குவை ஒழிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கேரள மாநிலத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 1,276 பேர் சிக்குன் குனியா காய்ச்சலினாலும், 700 பேர் மஞ்சள் காமாலை நோயாலும், 73 பேர் மலேரியா, டைபாய்டு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சலால் 4 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் தற்போது கேரளாவில் வேகமாக பரவி வருவதால் அம்மாநிலத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.