தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடித்த 5 சிங்கள மீனவர்கள் கைது
தூத்துக்குடி: தமிழக கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரை அடுத்த மணப்பாடில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை பிற்பகல் தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த விசைப்படகில் 5 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் அந்த 5 பேரையும் பிடித்து கரைக்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், 5 பேரும் இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
காற்று பலமாக வீசியதால் வழிதவறி வந்துவிட்டதாக அவர்கள் கூறினாலும் அதிகளவு மீன்களை பிடித்துச் செல்லும் நோக்கிலேயே துணிச்சலாக தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.