காங்கிரஸ், ஜெகனின் தலைவிதியை தீர்மானிக்கும் ஆந்திர இடைத்தேர்தலில் அமைதியான வாக்குப் பதிவு
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் கிரண்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆத்ரவாக திரண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து 18 பேரவை தொகுதிகளுக்கும் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி உள்ளது.
தெலுங்கானா பகுதியில் உள்ள பரக்காலா தொகுதியில் மட்டும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதனால் அங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது.
காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்குச் சாவடிகளில் காத்திருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலானது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் வென்றால் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படும். ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.,