பாக்.குக்கு 5,000 மெ.வாட் மின்சாரம், அப்போ தமிழகத்துக்கு? நாஞ்சில் சம்பத்
கரூர்: பாகிஸ்தானில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு அந்த நாட்டிற்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது. ஆனால் தமிழகத்திற்கு தர வேண்டிய மின்சாரத்தை தர மறுக்கிறது. இதை முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் ஏன் தட்டி கேட்கவில்லை? என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சில் ஆபாசம் இருந்ததாகக் கூறி கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விசாரணைக்காக கரூர் நீதிமன்றத்திற்கு வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாம்பன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தமிழகத்தில் அமராவதி ஆறு வற்றிவிடும். விவசாயம் அடியோடு அழிந்து விடும். எனவே, கேரள அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் 23ம் தேதி அன்று உடுமலைப்பேட்டையில் (அமராவதி ஆறு துவங்கும் இடம்) இருந்து (கரூர் மாவட்டம்) சின்னதாராபுரம் வரை 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்.
மத்திய அரசு தமிழக மக்களை 2ம் தர குடிமகனாக நடத்தி வருகிறது. அதற்கு உதாரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மொழிக்காக தன் உயிரை நீத்த தமிழர்களை சி.பி.எஸ்.சி. பாட புத்தகத்தில் கேலி சித்திரங்களாக வரைந்துள்ளது. இந்த பகுதியை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும். இல்லை எனில் அந்த புத்தகங்களை தீயிட்டு கொளுத்துவோம்.
பாகிஸ்தானில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு அந்த நாட்டிற்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது. ஆனால் தமிழகத்திற்கு தர வேண்டிய மின்சாரத்தை தர மறுக்கிறது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் ஏன் தட்டி கேட்கவில்லை?
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆகியவை வரும் செப்டம்பர் மாதம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடை பெற உள்ளது. அதற்காக ஜூன் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெறும்.
வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை கொண்டு புதிய கூட்டணியை மதிமுக உருவாக்கும். அதில் மதிமுக போட்டியிடும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை. அதிமுகவுடன் கூட்டணி என்பது குறித்து இப்போதைக்கு கூற முடியாது என்றார்.