திருப்பதி வெங்கடேச பெருமாளை அருகில் தரிசிக்கலாம்
கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை என்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பக்தர்களின் கும்பலை கட்டுப்படுத்தவும், அனைவரும் சாமி தரிசனம் செய்யவும் கோவிலில் தொலை தூர தரிசன முறை (மகா லகு) அமல்படுத்தப்பட்டது.
ஆனால் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் மட்டும் ரூ.300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் மூலவரை அருகில் சென்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. இது வரை திருமலையில் செவ்வாய், புதன் கிழமைகளில் பிற்பகலில் 2 மணி வரை மட்டுமே சிறப்பு நுழைவு தரிசனம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது விடுமுறை காலம் முடிந்து பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் இரவு நேரத்திலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று சாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் தொலை தூரதத்தில் இருந்து தான் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.