அதிமுக அரசு ஓவராகப் போகிறது, பொறுமைக்கும் எல்லை உண்டு: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுகவினரை ஆளுங்கட்சி குட்டிக் குனிய வைத்துவிட நினைக்கிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஆட்சியில் அமர்ந்து தாராளமாக ஆளட்டும். இது ஐனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்சியில் அமர்ந்துவிட்டோம் என்பதற்காக எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எல்லோரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 75 வயது உடையவர். இதய நோயாளி. அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் தம்பி, அவர் பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அவருடைய வீட்டுக்கு காவல் துறையினர் சென்று, மனைவி மக்களிடம் விசாரணை நடத்துகின்றனர். வேறு எந்த மாநிலத்திலாவது இந்தக் கொடுமைகள் உண்டா?
குற்றம் செய்துவிட்டார்கள் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறட்டும். நீதிபதிகள் தவறு என்று தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளட்டும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? இதுபோல் திமுகவைச் சேர்ந்த பலர் மீது கொடுமையும், பழிவாங்குதலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறலாமா?
இது தொடர்பாகத்தான் ஜூன் 22ல் திமுகவின் அவசர செயற்குழு நடைபெறுகிறது.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து ஜனநாயக ரீதியாகவும்,சட்ட விதிமுறைகளின் படியும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications