தென்காசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது ஆண் குழந்தை பலி
தென்காசி: தென்காசியை அடுத்த இலஞ்சி கிராமத்தில் 2 வயது ஆண் குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியானது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மெத்தனப் போக்கால் தான் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தென்காசியை அடுத்த இலஞ்சி கிராமம் கோமதி நகர் 7வது வார்டு முதல் தெருவைச் சேர்ந்தவர் பூதத்தான், முத்துமாரி தம்பதியினர். இவர்களின் ஒரே மகன் சித்தாயி. இவர்களது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு ரத்தம், சிறுநீர் மாதிரி எடுப்பதற்கு காலதாமதப்படுத்தியும், குழந்தைக்கு அவசர முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்த பெற்றோர் குழந்தையை நெல்லை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
இலஞ்சி பேரூராட்சியில் குடிநீர் வாரம் ஒருமுறையே விடுவதாலும் அப்படியே தண்ணீர் விடப்பட்டாலும் சாக்கடை கலந்த சுகாதாரமற்ற குடிநீரை வினியோகிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் டெங்கு கொசுக்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து மருத்துவ குழுக்கள் தற்போது அங்கு முகாமிடத் தொடங்கியுள்ளன. சுகாதாரமான குடிநீர் மற்றும் கொசுக்களை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.