கர்நாடக அரசியலில் திருப்பம்: எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் ராஜினாமா
கர்நாடகத்தில் முதல்வர் பொறுப்பில் இருந்து சதானந்த கவுடாவை மாற்ற வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் ஆதரவாளர்களின் ஓராண்டுகால கோரிக்கை. அவ்வப்பொழுது இந்த முழக்கம் எழுவதும் பின்னர் அடங்கிப்போவதும் வாடிக்கையாகிவிட்டது.
கடந்த ஒருவார காலமாக மீண்டும் சதனாந்த கவுடாவை மாற்றக் கோரி எதியூரப்பா ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும் அதிரடியாக 8 அமைச்சர்கள் நேரடியாக சதனாந்த கவுடாவை சந்தித்து ராஜினாமா செய்தனர். மேலும் ஷோபா, ராஜூ கவுடா ஆகியோரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். உடனடியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த ராஜினாமா நாடகத்துக்குப் போட்டியாக சதனாந்த கவுடாவை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி ராஜினாமா செய்யப் போவதாக அவரது ஆதரவு அமைச்சர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் பெங்களூரில் நேற்று இருதரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் தங்களது ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் முதல்வர் சதானந்த கவுடாவை டெல்லிக்கு வருமாறும் பாஜக மேலிடம் உத்தரவிட்டிருந்தது.
பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அமைச்சர்கள் வாபஸ் பெற்றால் மட்டுமே அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து தற்போது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருக்கிறார். அதேபோல் கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று டெல்லி செல்வதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். மேலும் ஜூலை 5-ந் தேதிக்குள் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் விலக்கிக் கொள்வதாகவும் ஜெகதீஷ் ஷெட்டரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.