இடதுசாரிகள் தலைமையில் புதிய கூட்டணி ஏற்படுமாம்: டி.ராஜா 'மிரட்டல்'!
புவனேஸ்வர்: காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு மாற்றாக இடதுசாரிகள் தலைமையில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஜனாதிபதி தேர்தலில் ஒரு கூட்டணியில் உள்ள கட்சிகள் மாற்று கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகளிடையே மாற்றம் ஏற்படவும், அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையில் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.
நாங்கள் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்காதபோதிலும், அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் தலைமையிலான ஜனநாயக் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசுக்கு பொருளாதாதர நிபுணர்கள் தவறான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியில் தொழில்துறை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு பின்தங்கியுள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அமெரிக்க அரசுக்கு ஆதரவான கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றுகிறது. ஒருபுறம் அரசு கிடங்குகளில் உணவுப் பொருள்கள் வீணாகி வருகின்றன; மறுபுறம் மக்கள் பசியால் வாடுகின்றனர்.
எதிர்க்கட்சியான பாஜகவோ, எந்தவிதமான இலக்கும் இன்றி உள்கட்சி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
எனவே, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று இல்லாவிட்டாலும், நாளை இந்தக் கூட்டணி அமைவது நிச்சயம்.
இதை மனதில் வைத்துத்தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, பாஜக கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா ஆகியோரை ஆதரிக்க மறுத்துவிட்டோம் என்றார்.
ஆனால், இடதுசாரிக் கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நிலையில் தான் புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக ராஜா கூறுகிறார்.












Click it and Unblock the Notifications