ஆதாயம் தரும் மேலும் 2 பதவிகளில் நீடிக்கிறார் பிரணாப்: சு. சாமி தலைமையில் சங்மா தரப்பு புகார்
இது தொடர்பாக பி.ஏ.சங்மா சார்பில் சுப்பிரமணியசாமி, சங்மாவின் வழக்கறிஞர் சத்யபால் ஜெயின் மற்றும் ஏஜெண்ட் பர்த்ருஹரி மக்தப் ஆகியோர் இன்று தலைமைத் தேர்தல் ஆணைய சம்பத்தை நேரில் சந்தித்து முறையிட்டனர். தேர்தல் அதிகாரியாக முறைகேடாக செயல்பட்டு பிரணாப்பின் வேட்புமனுவை ஏற்றிருப்பதாகவும் அவர்கள் சம்பத்திடம் குற்றம்சாட்டியதுடன் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடவும் வலியுறுத்தினர்.
தேர்தல் ஆணையருடனான சந்திப்பின் பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியசாமி கூறியதாவது:
ஆதாயம் தரும் 2 பதவிகளில் இப்பொழுதும் பிரணாப் முகர்ஜி நீடித்து வருகிறார். பிர்பூம் என்ஜினியரிங் இன்ஸ்டியூடடின் துணைத் தலைவராகவும், ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தினால் உருவாக்க ரவீந்திர பாரதி சொசைட்டியின் தலைவராகவும் பிரணாப் முகர்ஜி நீடித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட அரசியல் சாசனத்தில் இடமிருக்கிறது. இதற்காகத்தான் சங்மா மற்றும் குழுவினர் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி முறைகேடு செய்துள்ளார். இதனால் தேர்தல் ஆணையம் தலையிட்டு முடிவெடுக்கலாம் என்றார் அவர்,