இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்கள் விடுதலை
மன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 30-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேர் கரைக்கு திரும்பவில்லை. அவர்களைத் தேடி மேலும் 5 மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதான நிலையில் அந்த 5 மீனவர்களும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் 10 பேரையும் கைது செய்தது. அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். பல்வேறு இயக்கங்களும் இவர்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்தன.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடற்படையிடம் அவர்களை இலங்கை கடற்படை ஒப்படைக்க இருக்கிறது. இதையத்து அவர்கள் வீடு திரும்புகின்றனர்.