அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தவறிய அதிமுக அரசு: ராமதாஸ் தாக்கு
சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோ ரூ.5ம், சன்னரக அரிசி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது. காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்த நிலையில் அரிசி விலையும் பெருமளவு உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் அரிசி ஆலை அதிபர்களும், வணிகர்களும் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பது தான் விலை உயர்வுக்குக் காரணமாகும். கடந்த ஆண்டில் சாதனை அளவாக 105 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாக நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்திருந்தது. தேவைக்கும் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும், அரிசி விலை உயர்ந்திருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது என்பதையே காட்டுகிறது.
எனவே, பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொண்டு வந்து வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசியை வரவழைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications