இந்திய கணக்கு தணிக்கை துறையின் 150வது ஆண்டு-புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு
சென்னை: இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் 150வது ஆண்டை நினைவுக் கூறும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ஜி.பி.போரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய தலைமை கட்டுப்பாட்டு மற்றும் தணிக்கை துறையின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி சார்பில் புதிய 5 ரூபாய் நாணயங்கள் விரைவில் புழக்கத்தில் விட உள்ளது.
இந்த நாணயத்தின் முன்புறம் அசோகா தூணின் சிங்க முகமும், இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும் இந்தியா என்று எழுதப்பட்டிருக்கும். சிங்க முகத்தின் கீழ் பகுதியில் இடப்பக்கம் 5 ரூபாய் என்று சர்வதேச ரூபாய் குறியீட்டில் பொறிக்கப்பட்டு இருக்கும்.
நாணயத்தின் மறுபுறம் மத்தியில் இந்திய தலைமை கட்டுப்பாடு மற்றும் தணிக்கை துறையின் லோகோ அச்சிடப்பட்டு இருக்கும். இந்திய தலைமை கட்டுப்பாடு மற்றும் தணிக்கை துறை என்பது இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
தணிக்கை துறை லோகோவின் கீழ்ப்புறத்தில் 1860-2010 ஆண்டு சர்வதேச எண்ணில் குறிக்கப்பட்டு இருக்கும். 1906ம் ஆண்டு இந்திய நாணய சட்டத்தின்படி, இந்த புதிய 5 ரூபாய் நாணயம், சட்டப்படி செல்லத்தக்கது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 5 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.