அமைச்சர்கள் காரை ஓவர்டேக் செய்து மோதிய திமுக மாஜி எம்.எல்.ஏவின் மகன்!
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டிக்குச் சென்ற அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் பயணித்த காரை திரும்பத் திரும்ப ஓவர் டேக் செய்து பின்னர் கார் மோதி விபத்துக்குள்ளாக்கிய கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வேணுவின் மகன் ஆனந்த்தை போலீஸார் கைது செய்தனர். ஆனந்த் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் சாலையில் போக்குவரத்து பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பயிற்சி பள்ளியை ரூ. 15 கோடி செலவில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பயிற்சி பள்ளிக்கான இடத்தை பார்வையிட அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ரமணா இருவரும் ஒரே காரில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தனர். டி.வி.எஸ். டோல்கேட் அருகே அவர்களது காரை ஒரு கார் முந்த முயன்றது.
சிறிது நேரத்தில் அந்த காருக்கு அமைச்சர்கள் பயணம் செய்த கார் வழிவிட்டது. மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரோட்டோரத்தில் நின்றது.
அமைச்சர்களின் கார், அந்த காரை கடந்து சென்ற சில நிமிடங்களில் அந்த காரை ஓட்டி வந்தவர் மீண்டும் விரட்டியபடி வந்தார். மீண்டும் அமைச்சர்கள் காரை உரசியபடி முந்த முயன்றார்.
இதனால் உஷாரான போலீசார் அந்த காரை மடக்க முயன்றனர். இதற்கிடையே தச்சூர் கூட்டு ரோடு பகுதியில் அந்த கார் அமைச்சர்களின் காரை முந்த முயன்றது. அப்போது எதிரே ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. இதனால் நிலை தடுமாறிய அந்த கார் அமைச்சர்கள் பயணம் செய்த காரின் மீது மோதியது. இதில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அந்த காரில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். அந்த வாலிபர் மது போதையில் இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு அந்த வாலிபர் கும்மிடிப்பூண்டி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கி.வேணுவின் மகன் ஆனந்தகுமார் என்று தெரிய வந்தது.
ஆனந்த்தைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர்களின் காரை திமுக பிரமுகரின் மகன் மோத முயல்வது போல சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications