பொதுப்பணித்துறை அனுமதியின்றி கிணறு தோண்டிய நகராட்சி
நெல்லை: புளியங்குடியில் வாலமலையாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை அனுமதியின்றி ஒரே நாளில் 20 அடி ஆழத்தில் கிணறு தோண்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் புதிய குடிநீர் கிணறு தோண்ட சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. வளர்ச்சி நிதி மற்றும் நகராட்சி நிதியை சேர்த்து ரூ.50 லட்சத்தில் குடிநீர் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் வாலமலையாறு தற்போது வறண்டு காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 300க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த ஆற்று பகுதியில் குடிநீர் கிணறு தோண்டினால் மேலும விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே அப்பகுதியில் கிணறு தோண்டக் கூடாது என கடந்த 9ம் தேதி புளியங்குடி மேற்கு பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
இதற்கிடையே பொதுப்பணித்துறை மற்றும் கலெக்டரின் அனுமதியின்றி கடந்த புதன்கிழமை முதல் வாலமலையாற்றில் கிணறு தோண்டப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வாசுதேவநல்லூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தங்க முத்து புளியங்குடி நகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், அனுமதியின்றி வாலமலையாற்றின் குறுக்கே கிணறு தோண்டக் கூடாது என தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரது கடிதம் ஆணையாளரிடம் கிடைத்த சில மணி நேரங்களில் வாலமலையாற்று பகுதியில் 2 ராட்சத இயந்திரங்கள் மூலம் கிணறு வெட்டும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை வரை சுமார் 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். நகராட்சி மூலம் டெண்டர் விடப்படாத நிலையில் அவசர அவசரமாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட ஒரு இயந்திரம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கு மற்றொரு இயந்திரம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு்ள்ளது.