மும்பை தாக்குதலும் ஐ.பி. உளவுப் பிரிவின் மகா 'குறட்டையும்'!.. வெளிவரும் புதிய தகவல்கள்!!
மேலும் அந்தத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக மிக முக்கியமான ஒரு ரகசிய தகவல் ஐ.பிக்கு 10 நாட்களுக்கு முன்பே கிடைத்துள்ளது. ஆனாலும் அதை அவர்கள் பாலோ-அப் செய்யாமல் விட்டுவிட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் செளதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அபு ஜுண்டால் தந்துள்ள தகவல்கள், நமது உளவுப் பிரிவினர் எந்த அளவு அசட்டையாக இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மும்பையில் தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளும் பயன்படுத்திய சிம் கார்டுகள் முன்பே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதைத் தந்ததே ஜம்மு-காஷ்மீர் போலீசின் உளவுப் பிரிவினர் தான்.
சுமார் 35 சிம் கார்டுகளை லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள அந்தத் தீவிரவாத அமைப்பின முக்கியப் பிரமுகர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் போலீசார் தான் தந்துள்ளனர்.
அந்த அமைப்பை ரகசியமாக கண்காணிப்பதற்காக அந்த சிம் கார்டுகளை லஷ்கர் அமைப்புக்கு அனுப்பிய ஜம்மு காஷ்மீர் போலீசார், கார்டுகளின் எண்களை உளவுப் பிரிவான ஐ.பிக்கும் தெரிவித்துள்ளனர்.
''இந்த சிம் கார்டுகள் லஷ்கர் அமைப்புக்குள் ஊடுருவச் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்களை தொடர்ந்து கண்காணிக்கவும், இந்த எண்களை பயன்படுத்தும் நபர்கள் நம் நாட்டுக்குள் இருந்தால், அவருக்கு லஷ்கருடன் தொடர்பிருக்க வாய்ப்பு அதிகம்'' என்ற நோட் போட்டு அதை ஐ.பிக்கு அனுப்பி வைத்தனர் காஷ்மீர் போலீசார்.
இதையடுத்து அந்த சிம் கார்டுகள் மூலமாக நடந்த செல்போன் உரையாடல்களை ஐ.பி. தான் ஒட்டுக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், மும்பை தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே தங்களது கைக்கு இந்த சிம் கார்டுகளின் விவரங்கள் வந்து சேர்ந்த பிறகும் அந்த சிம் கார்டுகளை பயன்படுத்திய செல்போன்களின் உரையாடல்களை கண்காணிக்க ஐ.பி. தவறிவிட்டது.
இந்த 35 சிம் கார்டுகளில் இருந்து 10 கார்டுகளைத் தான் மும்பையில் தாக்குதல் நடத்தச் சென்ற தீவிரவாதிகளிடம் தந்துள்ளது லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு. இந்த எண்கள் மூலமாகவே கராச்சியிலிருந்து தீவிரவாதிகளுக்கு லைவ் ஆக உத்தரவுகளைப் போட்டு மும்பை தாக்குதலை லஷ்கர் தீவிரவாத அமைப்பு நடத்தியுள்ளது.
மும்பையில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் நடத்திய உரையாடல்களை, ஐ.பி ஒட்டு கேட்டது. அப்போது தான், இந்த சிம் கார்டுகள் ஜம்மூ-காஷ்மீர் போலீசார் தந்த எண்களாயிற்றே என்ற விவரமே அவர்களுக்கு உரைத்தது.
இதையடுத்து இந்த சிம் கார்டுகள் கொண்ட செல்போன்கள் எங்கெங்கு பயணித்தன என்பதை பார்த்தபோது மாலை 4 மணிக்கு தீவிரவாதிகள் மும்பையில் இருந்து 7.4 கி.மீ. தூரத்தில் கடல் எல்லையில் இருந்ததும், இரவு 8 மணிக்கு கொலாபா-பண்ட்வார் பார்க் பகுதியில் கரைக்கு வந்ததும் செல்போன் டவர்களுக்கு வந்த சிக்னல்கள் மூலம் தெரியவந்தன.
இந்த விவகாரத்தில் ஐ.பி. மட்டும் தோற்கவில்லை.
நமது வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா அமைப்புக்கு மிகத் தெளிவான ஒரு விவரம் கிடைத்தது. அதாவது, மும்பையின் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்ற விவரமே ரா வசம் இருந்தது.
ஆனால், அதை கடலோர காவல் படைக்கோ, கடற்படைக்கோ, மும்பை போலீசாருக்கோ அல்லது நட்சத்திர ஹோட்டல்களுக்கோ ரா தெரிவிக்கவில்லை. அவர்கள் அதை தெரிவித்து உரிய முன்னெச்சரிக்கைகள் எடுத்திருந்தால் மும்பை தாக்குதலையே தவிர்த்திருக்க முடியும். அதை ரா செய்யவில்லை.
இவ்வாறாக உளவுப் பிரிவுகளில் இருந்த மாபெரும் ஓட்டைகளுக்குக் காரணம், அதன் தலைவர்கள் சரியில்லை என்று கருதிய மத்திய அரசு ஐ.பி, ரா ஆகியவற்றின் தலைவர்களை முடிவு செய்தது. ஆனால், நவம்பரில் தாக்குதல் நடந்த அதே ஆண்டு டிசம்பரில் ஐ.பி. தலைவரும், அடுத்த ஒரு மாதத்தில் ரா தலைவரும் ஓய்வு பெற இருந்ததால் இருவரையும் மத்திய அரசு விட்டுவிட்டது என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஐ.பியை தன் வசம் வைத்திருந்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நீக்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா அந்தத் துறையை ப.சிதம்பரம் வசம் தந்தார்.
சிதம்பரம் வந்த பிறகு உளவுப் பிரிவுகளின் செயல்பாடுகள் ஓரளவுக்கு சரியாகிவிட்டன என்கிறார்கள்.