நெல்லை அருகே மணல் கடத்தல் கும்பல்-போலீஸ் மோதல்: 3 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் மாவடி அருகே மணல் கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி, களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி ஆகிய பகுதிகளில் குளங்களில் இருந்தும், நம்பியாற்றில் இருந்தும் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்குறுங்குடி பகுதியில் குளத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். இதையறிந்த மணல் கடத்தல் கும்பல் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை போட்டுவிட்டு தப்பி ஓடியது. இதையடுத்து போலீசார் 4 டிராக்டர்கள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் முத்துராஜ் திடீரென மாற்றப்பட்டு மனோகரன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மாவடி அருகே உள்ள மலையடி புதூர் குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 3 டிராக்டர்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மணல் கடத்தல் கும்பலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல் போலீசாரை கீழே தள்ளிவிட்டுவிட்டு அவர்களை அவதூறாகப் பேசிவி்ட்டு தப்பியோடியது.
அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் மாவடியைச் சேர்ந்த ராஜ்குமார், செல்வன், ஜெகதீசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரை அவதூறாகப் பேசிவிட்டு தப்பியோடிய ராமசந்திரன், எட்வார்ட், பிரவின், ராஜா, செல்வராஜ், அருள், வைலட் ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர்.