முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு டிரான்ஸ்பர் உத்தரவு தயாரித்தவர் கைது!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை போலியாகப் போட்டு போலி பரிந்துரைக் கடிதம் தயாரித்தது தொடர்பாக சென்னை அச்சக அதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த இளந்துரை கிராமத்தைச் சேர்ந்த பெமிலா, சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றினார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் குழித்துறை அருகே உள்ள மேல்புறம் பள்ளிக்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விண்ணப்பித்திருந்த பணியிட மாறுதல் விண்ணப்பத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு உத்தரவு அனுப்பியது போல் ஒரு கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துப் போனது. பொதுவாக ஆங்கிலத்தில் முதல்வர் கையெழுத்துடன் கூடிய உத்தரவு கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு செல்வது கிடையாது என்பதால் சந்தேகமடைந்தனர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்
அதே நேரத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு பிரின்ஸ் எட்வின் என்பவர் நேரில் வந்து ஏற்கெனவே வந்த முதல்வரின் கடிதத்தின் நகலை காட்டி ஏன் இன்னமும் ஆசிரியை பெமிலாவுக்கு பணியிட மாறுதல் போடவில்லை என்று மிரட்டியுள்ளார்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு எட்வின் கொண்டு வந்த கடிதம் பொய்யானது என்றும் முதல்வரின் பெயரில் போலி கடிதம் அனுப்பியதும் எட்வின்தான் என்பதும் தெரியவந்தது. எட்வினும் முதல்வரின் கையெழுத்தை போலியாகப் போட்டு உத்தரவு கடிதம் தயாரித்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.