தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் இழப்பீடு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் இழப்பீடு
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் மன் மோகன்சிங் அதிர்ச்சி அடைந்தார். உடனே ரயில்வே அமைச்சர் முகுல்ராயுடன் தொலைபேசியில் பேசி நிலவரத்தைக் கேட்டறிந்து பின்னர் இரங்கல் செய்தி வெளியிட்டார்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியதாவது:
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்து பற்றி பிரதமர் என்னிடம் பேசி இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிதி வழங்க உத்தர விடப்பட்டுள்ளது என்றார் அவர்.