விருதுநகரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் சிக்கியது : ரூ. 10 லட்சம் பறிமுதல்
விருதுநகரில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக சனிக்கிழமையன்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் விருதுநகரில் உள்ள ஏழு கிட்டங்கி தெருவைச் சேர்ந்த பாலன் என்பது தெரியவந்தது.
அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டபோது கட்டுக் கட்டாக 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருந்து மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான கம்ப்ïட்டர் மையத்தில் போலீசார் அதிரடியாக சோதனை போட்டனர். இந்த கம்ப்ïட்டர் மையத்தில் தான் 1000 ரூபாய் கள்ள நோட்டு வடிவமைக்கப்பட்டு கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீசார் பாலன் (47), கார்த்திக் (35), அச்சக அதிபர் ராமர் (39) ஆகிய 3 பேரையும் ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் முதன் முதலாக தற்போது தான் 1000 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்திருப்பது தெரியவந்தது. திண்டுக்கல், மதுரை பகுதியில் இந்த கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு முன்பே போலீசார் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விட்டனர். 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் 58 வரிசை எண்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இண்டியன் கரன்சி என்று பெயரிடப்பட்ட இணையதளத்திற்குள் சென்று அதில் இருந்து 1000 ரூபாய் கள்ள நோட்டு வடிவத்தை டவுன்லோடு செய்து அதை கம்ப்ïட்டர் மூலம் கலர் பிரிண்ட் எடுத்ததாக கம்ப்ïட்டர் மைய உரிமையாளர் கார்த்திக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனை வைத்து பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ராமர் என்பவருக்குச் சொந்தமான அச்சகத்தில் 1000 ரூபாய் நோட்டு அளவுக்கு கட்டிங் செய்து புழக்கத்தில் விட திட்டமிட்டு இருந்தபோது போலீஸ் பிடியில் சிக்கி கொண்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஏழு கிட்டங்கி தெருவைச் சேர்ந்த பாலன் என்பவர்தான் கள்ள நோட்டுக்களை அச்சடிப்பதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவர்களுக்கும் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த வேறு கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசாருக்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி நஜ்மல் ஹோடா பாராட்டு தெரிவித்துள்ளார்.