அமெரிக்க குருத்வாராவில் 6 பேரை சுட்டுக் கொன்றவர் முன்னாள் ராணுவ வீரர்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் ஓக் கிரீக் பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டுதலமான குருத்வாராவுக்கு நேற்று காலை 11 மணி அளவில் மர்ம நபர் வந்து திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் குருவாராவுக்கு வெளியே 4 பேரும், உள்ளே 3 பேரும் குண்டு பாய்ந்து பலியாகினர். இறந்தவர்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும், போலீஸ்காரர் ஒருவரும் அடக்கம்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் காயம் அடைந்தனர். மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் ப்ரோடெர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம நபர் குருத்வாராவுக்குள் நுழைந்தபோது 400 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் குருத்வாராவின் தலைவரும் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க வெள்ளையரான அந்த நபர் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதை தெரிந்து கொள்ள போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அமெரிக்க ராணுவத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
அவர் 9 மிமீ செமி ஆட்டமேட்டிக் கைத்துப்பாக்கியை வைத்து தான் 6 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளார். சம்பவ இடத்தில் கிடந்த அந்த துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உள்ளூர் தீவிரவாதச் செயலே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் தான் அமெரிக்காவில் உள்ள தியேட்டர் ஒன்றில் பேட்மேன் படம் திரையிடப்பட்டபோது ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்ற நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் படம் பார்த்துக் கொண்டிருந்த 12 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.