ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு
சென்னை: இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை துவங்குகிறது.
இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது.
வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் துவக்கி வைக்கிறார். இதில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். சீருடை அணிந்த 50 இளம்பெண்கள் மாநாட்டு கொடியை ஏந்தி பாட்னாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கின்றனர்.
மாநாட்டில் சமுதாயத்தில் பெண்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகள், பொது நவீன கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மாநாட்டின் 2ம் நாள் முக்கிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில், இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறி்த்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பிரேசிலில் நடந்த மாதர் தேசிய சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹரியானாவை ஒப்பிடுகையில் தமிழகத்தின் பெண் சிசுக் கொலை மிக மிகக் குறைவு ஆகும். ஆனால் தேசிய அளவில் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றார்.