ரயில் டிக்கெட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி நாடு தழுவிய வேலை நிறுத்தம்
இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் பரிசோதகர் பணியிடங்களை நிரப்ப கோரி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கீழ் இயங்கும் சென்னை கோட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் கவுன்சில் சார்பாக, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் அசோக்குமார் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கோட்ட தலைவர் சாரங்கபாணி, செயலாளர் பால் மேக்ஸ்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த போராட்டத்தில் ரயில்வேயில் காலியாக உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு அறை ஒதுக்க வேண்டும். வேலை நேரத்தை முறைப்படுத்தி, வேலைப்பளுவை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த என்.கண்ணையா, டிக்கெட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, வரும் 23ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் டிக்கெட் பரிசோதகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய ரயில்களை அறிவிக்கும் ரயில்வே நிர்வாகம், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க தவறுகிறது. இதனால் பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.
இதனால் ஒரு டிக்கெட் பரிசோதகர் 7 கோச் வரை கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி வரும் 23ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர் என்றார்.