ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்: மடக்கிப் பிடித்த பயணிகள்
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தொப்புள்கொடி கூட அறுக்காத பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மின்சார ரயில் ஒன்று செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த பெண் ஒருவர் பிளாஸ்டிக் பையை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று மறைத்தவாறு வந்தார். திடீர் என்று அந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் வந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அந்த பையை வாங்கிப் பார்த்தனர்.
பையில் தொப்புள் கொடி கூட அறுக்காமல் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததைப் பார்த்த பயணிகள் அதிர்ந்து போய் அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அந்த பெண் அது தனக்கு முறை தவறி பிறந்த குழந்தை என்றும், வளர்க்க விரும்புபவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சர்வசாதாரணமாக தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த பெண்ணை கண்டித்தனர். இதனால் அப்பெண் கடுப்பாகி குழந்தையை ரயிலில் இருந்து கீழே வீச முயன்றார்.
ஆனால் அதற்குள் அங்கிருந்த மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த ஊரப்பாக்கம் லட்சுமி ரகுராம் உள்ளிட்ட பயணிகள் குழந்தையை மீட்டு தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில் தாம்பரத்திற்கு வந்தவுடன் அங்கு தயாராக நின்றிருந்த போலீசார் அந்த குழந்தையை மீட்டு பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து குழந்தையுடன் அந்த பெண் எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அந்த பெண்ணை இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார். விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சித்ரா(36) என்பது தெரிய வந்தது.
சித்ரா போலீசாரிடம் கூறுகையில்,
எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு எனக்கு வேறு ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் கர்ப்பமான எனக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு செங்கல்பட்டு வந்தேன். அங்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் ஏறினேன். மேலும் குழந்தையை ரயிலில் இருந்து வீசிக் கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கழக மகளிர் அணி அமைப்பாளர் கல்பனா மற்றும் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்தனர். பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்தா கொண்டு வருவது என்று கூறி சித்ராவின் கன்னத்தில் கல்பனா அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சித்ராவையும், குழந்தையும் தாங்களே கவனித்துக் கொள்வதாக போலீசாருக்கு எழுத்து மூலம் தெரிவித்துவிட்டு அவர்களை அழைத்துச் சென்றனர்.