நகைக் கொள்ளையனின் மினி பஸ், காரை அபகரி்த்து விற்ற போலீசார்? விசாரணைக்கு உத்தரவு
நெல்லை: நகை கொள்ளையர்களிடம் இருந்து மினி பஸ், கார் ஆகியவற்றை அபகரித்து விற்றதாக தனிப்படை போலீசார் மீது பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள பிரபல நகைகடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லை தனிப்படை போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், திசையன்விளையைச் சேர்ந்த ஐசக், வெள்ளத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் வள்ளியூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் நெல்லை, கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை, வழிப்பறி வழக்குகளிலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கொள்ளையடித்த பணத்தில் ஆதி நாராயணன் மினி பஸ், கார், பைக் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளார்.
மேலும் அவர் நெல்லையில் உள்ள டாஸ்மாக் கடை, தனியார் வங்கி, வீடுகளிலும் கொள்ளையடித்துள்ளார். ஒரு சில வழக்குகளில் மட்டும் நகை, பணத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதி நாராயணன் உள்பட 3 பேரையும் சிறையில் அடைத்தனர். வள்ளியூர் நகைகடையில் கொள்ளையடித்ததை கணக்கில் காட்டாமல் தனிப்படை போலீசார் மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலு்ம் ஆதி நாராயணனிடம் இருந்து பைக், மினி பஸ், கார் ஆகியவற்றை கைப்பற்றி வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். இந்த விபரம் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிய வரவே விற்கப்பட்ட பைக், கார், மினி பஸ் ஆகியவை மீட்கப்பட்டு வள்ளியூர் காவல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் பஸ், கார் ஆகியவற்றை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வற்புறுத்தலின்பேரில் தான் நாங்கள் வாங்கினோம் என அவர்கள் புகார் செய்தனர். இதுபோல் நகை கடை உரி்மையாளரும் தனக்குரிய நகைகள் மீட்டு தரப்படவில்லை என புகார் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.