டெசோ மாநாடு: இலங்கையின் 4 தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு?
4 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டமைப்பில் மொத்தம் 5 கட்சிகள் உள்ளன.
திமுக சார்பில் டெசோ மாநாடு வரும் 12ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தோர் பங்கேற்கின்றனர் என்று தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இலங்கை அரசு கடந்த 6ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம், அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை நாட்டினர் கண்காணிக்கப்படுவார்கள்' என்று கூறியிருந்தது.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே போல டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை செல்ல இலங்கையின் இடதுசாரி கட்சியின் தலைவரான டாக்டர் விக்ரமபகு கருணாரத்னேவுக்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துள்ளது.
இந் நிலையில் இந்த மாநாடு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கடந்த இரு தினங்களாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநாட்டில் பங்கேற்பதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள 5 கட்சிகளில் 4 கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழக மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய 4 கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
இலங்கை அரசின் நெருக்கடி காரணமாகவே கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டமைப்பில் மீதமுள்ள தமிழ் அரசு கட்சி மட்டும் இன்றும் ஆலோசனை நடத்தி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்க உள்ளது. ஆனால், கூட்டமைப்பில் உள்ள 4 கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில் அந்தக் கட்சியும் பங்கேற்பது சந்தேகமே என்று தெரிகிறது.
மாநாட்டில் கலந்து கொள்வோர்.. திமுக அறிவிப்பு:
இந் நிலையில் டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அவர்களது பெயர் விவரம்,
ஆனந்த் குருசாமி (தேசிய இயக்குனர், ஆம்நெஸ்டி இன்டெர்நெஷனல்), கெமால் இல்திரிம்ஸ் (தூதர், பன்னாட்டு மனித உரிமை ஆணையம்), நஸீம் மாலிக் எம்.பி (சுவீடன்), மூசா அகமது (தூதர், பன்யாரா கிட்டாரா கிங்டம், தலைவர், வேல்ர்டு ஆர்ட் கேம்ஸ், நைஜீரியா), அப்துல் ரசாக் மோமோ எம்.பி (நைஜீரியா), அஃபெகோ முபாரக் (தலைவர், தேசிய உண்மை நீதி ஆணையம், மொராக்கோ), யுஸ்மாடி யூசுஃப் எம்.பி (மலேசியா),
லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி, பேராசிரியர் ராம்கோபால் யாதவ் எம்.பி (பொதுச் செயலாளர், சமாஜ்வாதி கட்சி), எஸ்.டி.ஷாரிக் எம்.பி (பொதுச் செயலாளர், தேசிய மாநாட்டுக் கட்சி), கோவிந்தராவ் அடிக் (நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி), கே.சி.தியாகி (ஐக்கிய ஜனதா தளம்), மாவை சேனாதி ராஜா எம்.பி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), சுமந்திரன் எம்.பி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு),
எஸ்.செல்வம் அடைக்கலநாதன் எம்.பி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ராஜீவ் ஸ்ரீதரன், யு.எஸ்.ஏ., குகதாசன் குகசேனன், யு.கே.குலசேகரன் ஜெயராஜ், சுவிட்சர்லாந்து, என்.சிவானந்த சோத்தி, யு.கே.