தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
சென்னை: தமிழகத்தில் குட்கா, போதைப் பாக்குகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வாய்ப்புற்று நோய், தொண்டைப் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு காரணமான குட்கா, போதைப் பாக்கு உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் கடந்த 1.8.2011 அன்று பிறப்பித்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகளில், குட்கா மற்றும் போதைப் பாக்குகளுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதை பின்பற்றி கேரளா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் போதைப் பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியும், அம்மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் போதைப் பாக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மே 31 மற்றும் ஜுலை 16ம் தேதிகளில் நான் கடிதம் எழுதியிருந்தேன்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, பசுமை தாயகம் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டு 2ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக முதல்வரின் சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளை தடை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையின்படி, தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளை தடை செய்வதற்கான கருத்து அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தமிழக முதல்வரின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாய்ப்புற்றுநோயின் தலைநகராக சென்னை உருவெடுத்துள்ள நிலையில், குட்கா மற்றும் போதைப் பாக்குகளின் தீமையை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக குட்கா, போதை பாக்குகளை தடை செய்யும் உத்தரவை வெளியிட வேண்டும். தமிழக அரசு தடை உத்தரவை வெளியிடாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
எனவே குட்கா, போதைப் பாக்குகளுக்கு தடையை உடனடியாக நடைமுறைப்படுத்தி இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள பல லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களையும், சிறுவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.