அருணாசலப் பிரதேசம் தனக்கே சொந்தம் என்கிறது சீனா: அது 'தெற்கு திபெத்' என்கிறது!

அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பகுதி தனக்கே சொந்தம் என்றும் சீனா கூறியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்திய-சீன சர்வதேச எல்லையை சீனா ஏற்க மறுத்து வருகிறது. அங்கு அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 90,000 சதுர கி.மீ. பகுதியை தனக்கே சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு 'தெற்கு திபேத்' என்று சட்ட விரோதமாக பெயர் சூட்டியுள்ளது சீனா.
ஆனால், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும் என்று கூறியுள்ளார் அகமத்.
இதற்கிடையே சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவான்ங்லி வரும் 2ம் தேதி மும்பை வருகிறார். அப்போது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா வரும் முதல் சீன பாதுகாப்பு அமைச்சர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications