திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த கரூர் போலீஸ்: ஓ.கே. சொன்ன ஹைகோர்ட்
கரூர்: கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு அதன் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு செய்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த மாதம் 25ம் தேதி மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் கரூர் காவல் நிலைத்தில் மனு அளித்திருந்தார்.
ஆனால் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் அருள்மிகு பசுபதீஸ்வர் கோவில், நகராட்சி பள்ளி, அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் வழக்கறிஞர் பிந்தரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், செப்டம்பர் 10ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வரும் 10ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கரூர் நகராட்சி குடிநீர் பிரச்சனை, எதிர்கட்சிகள் வார்டுகள் புறக்கணிப்பு, நகர் மன்றத் தலைவரின் செயல்பாடு, பாதாள சாக்கடை பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் முன் வைக்கப்படும் என்று திமுக தரப்பில் கூறப்படுகின்றது.