அகிலேஷ் சொல்லித்தான் ராகுல் காந்தி மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்தேன்: முன்னாள் எம்.எல்.ஏ.
டெல்லி: உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சொல்லித் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டதாக வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது அலகாபாத் உயர் திமன்றத்தில் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ராகுல் காந்தி தனது தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், இது குறித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆதாரமில்லாமல் வழக்கு தொடர்ந்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சம்ரிட்டே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
உத்தரபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, கிராமத்து இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று கற்பழித்துவிட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அங்கு சென்று சிலரிடம் விசாரித்தபோது, அதை உறுதிப்படுத்தினர். இந்த தகவல்களுடன் சென்று, டெல்லியில் முகாமிட்டு இருந்த சமாஜ்வாடி கட்சி தலைவர்களை நான் சந்தித்தேன்.
நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு, முக்கிய தலைவர்களை சந்திக்க அனுமதி கிடைத்தது. அவர்களிடம் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட விவரத்தை கூறினேன். இதைக் கேட்ட அவர்கள், காலதாமதம் செய்யாமல் உடனடியாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடருங்கள் என்று என்னை தூண்டினர்.
மேலும் இந்த வழக்கில் எனக்கு உதவுவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் பின்வாங்கி விட்டனர். எனக்கு எதிராக மாறிவிட்டனர். ராகுல் காந்திக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த குற்றம் நடைபெற்றதா? என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதது சம்ரிட்டே சார்பில் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் உங்கள் மனுதாரர் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் சொல்லித் தான் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் யார் என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றனர்.
அதற்கு ஜெய்ஸ்வால் கூறுகையில், தற்போதைய முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தான் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடருமாறு கூறினார். அப்போது எம்.பி.யாக இருந்த அகிலேஷ் யாதவின் பந்தாரா வீட்டு்க்கு சென்று சம்ரிட்டே நடந்த விவரங்களைத் தெரிவித்தார். அதன் பிறகு ராகுல் மீது வழக்கு தொடருமாறு அகிலேஷ் கூறியதுடன், எனது மனுதாரருக்கு ஆதரவாக இருப்பதாகவும் உறுதியளித்தார் என்றார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மாநில அரசு வழக்கறிஞர் ரத்னாகர் தாஷ் மறுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை ராகுல் காந்தி ஏற்கனவே மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications